கரையோரப் பூந்தோட்டங்களுக்குச் செல்பவர்கள், அங்கு நடைபெறும் ‘ஃபிளவர் மார்க்கெட்’ மலர்க்காட்சியிலிருந்து செயற்கை மலர்களைத் தங்களது நினைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
ஆஸ்திரேலியத் தற்காலக் கலைஞர் சிஜே ஹென்ரி உருவாக்கியுள்ள இந்த மலர்க்காட்சி, தென்கிழக்காசியாவில் முதன்முறையாகச் சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான செயற்கை மலர்கள் வாளிகளில் நிரப்பப்பட்டுக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
ஹென்ரி வடிவமைத்துள்ள இந்த மலர்கள், 30க்கும் மேற்பட்ட உண்மையான மலர் வகைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாகத் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதில் சிங்கப்பூர் கண்காட்சிக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எட்டு மலர் வகைகளும் அடங்கும். இக்கண்காட்சி இம்பா தியேட்டரின் கலைக்கூடத்தில் இடம்பெறும்.
நியூயார்க்கைத் தளமாகக் கொண்டுள்ள ஹென்ரி, அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களைப் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளாக மாற்றுவதில் உலகப் புகழ்பெற்றவர்.
அவரது இந்த ‘ஃபிளவர் மார்க்கெட்’ கண்காட்சி, முதன்முதலில் கடந்த 2024 செப்டம்பரில் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. அபுதாபி, சிட்னி, ஹாங்காங் போன்ற நகர்களிலும் இக்கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியைக் காண்பதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இதற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட போதிலும், தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (கடைசி அனுமதி இரவு 8 மணிக்கு) பொதுமக்கள் நேரடியாகக் கலைக்கூடத்திற்குச் சென்று பார்வையிடலாம். எனினும், கலைக்கூடத்தின் இடவசதியைப் பொறுத்தே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.
கண்காட்சிக்கு வருவோருக்கு ஒரு மலர் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் மலர்களைப் பெற விரும்புவோர் ஒரு மலர்க்கு $7 செலுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், ஹென்ரி வடிவமைத்துள்ள துணிப்பைகள், தொப்பிகள், டி-சட்டைகள் போன்ற பிற பொருள்களும் கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

