துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு வரும் மோட்டார்சைக்கிளோட்டிகள் காலை உச்சநேரத்தின்போது மேலும் விரைவாகக் குடிநுழைவு அனுமதியைப் பெற முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இவ்வாண்டு மே மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்திய ‘சன்ரைஸ்’ நடவடிக்கையே இதற்குக் காரணம்.
துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு வரும் மோட்டார்சைக்கிளோட்டிகள் விரைவில் குடிநுழைவு அனுமதியைப் பெறவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரைவிட்டு வெளியேறும் வாகனங்களுக்கான பயன்படுத்தப்படாத தானியக்க மோட்டார்சைக்கிள் தடங்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழையும் மோட்டார்சைக்கிள்களைத் திசைதிருப்பிவிடுவது அந்நடவடிக்கையில் அடங்கும்.
அத்தகைய மேலும் 30 தடங்களைத் திறந்தால், ஆணையத்தால் மோட்டார்சைக்கிள்களின் தேக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
மலேசியாவிலிருந்து துவாஸ் சோதனைச்சாவடிக்குள் நுழையும் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், மோட்டார்சைக்கிள் போக்குவரத்தைத் திசைதிருப்புவதும் விரைவாகக் குடிநுழைவு அனுமதி பெறுவதும் மிக முக்கியமாகி உள்ளன.
வாரநாள்களில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக அன்றாடம் ஏறக்குறைய 123,000 பேர் சிங்கப்பூருக்கு வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட 68,000 பேர் மோட்டார்சைக்கிளோட்டிகள்.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்திற்கு முன்னர் துவாஸ் சோதனைச்சாவடியைப் பயன்படுத்திய 65,000 மோட்டார்சைக்கிளோட்டிகளைக் காட்டிலும் இது அதிகம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
உச்சநேரங்களில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் மேற்கொள்ளும் மோட்டார்சைக்கிளோட்டிகளின் முக்கியச் சாலையாக துவாஸ் சோதனைச்சாவடி விளங்குகிறது.
வாரநாள் உச்சநேரமான காலை 5 மணியிலிருந்து 9 மணிவரை ஏறக்குறைய 22,000 மோட்டார்சைக்கிளோட்டிகள் அன்றாடம் துவாஸ் சோதனைச்சாவடியைப் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு வரும் மோட்டார்சைக்கிள்களுக்கு காலை உச்சநேரத்தின்போது மட்டும் ‘சன்ரைஸ்’ நடவடிக்கை இடம்பெறுவதாக ஆணையம் கூறியது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியிலும் இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராய்வதாக ஆணையம் தெரிவித்தது.