சிலேத்தார் வெஸ்ட் லிங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் 57 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் காரும் மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்று நிகழ்ந்திருப்பதாக அன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்தது.
சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்த விபத்து பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சில தகவல்களைத் தெரிவித்தது.
செங்காங் பொது மருத்துவமனையில் ஒருவரை தாங்கள் சேர்த்ததாகவும் மற்றொருவர் தமது லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் அந்தப் படை கூறியது.
பின்னர், அந்த விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிய பெண் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. மரணம் விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு அந்தப் பெண் உதவி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று டிக்டாக் தளத்தில் பதிவேற்றப்பட்டது. துணை மருத்துவர்கள் மூவர் சம்பவ இடத்தில் இருப்பதையும் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் அந்தக் காணொளியில் காணமுடிந்தது.
அந்த வழியாகச் சென்ற சிலர், போக்குவரத்தை ஒழுங்கு செய்வதும் அதில் பதிவாகி இருந்தது.


