சிங்கப்பூரில் உள்ள பார்வை குறைபாடுள்ளோர், வாகனங்களுக்கான பதிவைச் சுலபமாக செய்ய உதவும் குரல் பதிவு அம்சத்தை கிராப் நிறுவனம் சோதித்து வருகிறது.
கிராப் செயலியில் உள்ள அந்தக் குரல் பதிவு அம்சம்வழி பயனீட்டாளர்கள் ஒரு நண்பரிடம் பேசுவதைப் போல பேசி வாகனங்களுக்குப் பதிவு செய்யலாம்.
செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு பார்வை குறைபாடுள்ளோரிடம் உரையாடி அவர்களின் பதிவை உறுதி செய்வதோடு விவரங்களையும் சரிபார்க்கும்.
ஒன் நார்த்தில் செயற்கை நுண்ணறிவு நிலையத்தை வெள்ளிக்கிழமை (மே 23) அறிமுகம் செய்த கிராப் நிறுவனம், புதிய அம்சம் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.
நிறுவனம் உருவாக்கும் பல புது அம்சங்களில் குரல் பதிவு அம்சமும் ஒன்று.
புதிய நிலையத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் உற்பத்தி, பொறியியல், தரவுப் பகுப்பாய்வு போன்ற துறைகளில் குறைந்தது 50 பேரைப் பணியமர்த்த கிராப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குரல் பதிவு அம்சம் குறித்து பேசிய கிராப் நிறுவனம், சிங்கப்பூர் பார்வை குன்றியோர் சங்கத்தின் உறுப்பினர்கள் பல கலந்துரையாடல்களில் பங்கேற்றதையும் புதிய அம்சத்தின் சோதனையில் ஈடுபட்டுள்ளதையும் குறிப்பிட்டது.
உறுப்பினர்களின் கருத்துகள் மூலம் அவர்களின் தேவைகளை நிறுவனத்தால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
உரையிலிருந்து எழுத்துக்கு மாற்றும் அம்சத்தை மேம்படுத்த கிராப் ஊழியர்களும் 80,000 குரல் பதிவு மாதிரிகளை வழங்கியிருப்பதாக நிறுவனம் சொன்னது.
கிராப் நிறுவனம் ஜூன் மாதம் ‘குரல் கொடை’ திட்டத்தையும் அறிமுகம் செய்யவிருக்கிறது. கிராப் பயனீட்டாளர்கள், கட்டடங்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் ஆகியவற்றை உச்சரித்து பதிவு செய்து கிராப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
பார்வை குறைபாடுள்ளோரைத் தவிர மூத்த பயனீட்டாளர்களுக்கும் உதவும் வழிகளை கிராப் நிறுவனம் கண்டறிய முற்பட்டுள்ளது.