கறுவுறுதல் சிகிச்சை மேற்கொள்வோருக்கு வேலையிடத்தில் சில சவால்கள் எழுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லாப நோக்கமற்ற அமைப்பான ஃபெர்டிலிட்டி சப்போர்ட் சிங்கப்பூர் (Fertility Support Singapore), 504 பேரிடம் தரவுகளைச் சேகரித்தது. 504 பேரில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் பெண்கள், 20 விழுக்காட்டினர் ஆண்கள்.
ஆய்வில் கலந்துகொண்ட 41 விழுக்காட்டினர் கருவுறுதல் சிகிச்சையால் அவர்களது வேலையிடப் பணிகளில் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர்.
மேலும் 13 விழுக்காட்டினர் கருவுறுதல் சிகிச்சைக்காகத் தங்கள் வேலையிலிருந்து விலக வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
அதேபோல் 34 விழுக்காட்டினர், தங்கள் சிகிச்சைக்காக விடுப்பு அல்லது வேலை நேரத்தில் நீக்குப்போக்காக வேலை செய்யும் சூழல் இல்லை என்றும் கூறினர்.
கருவுறுதல் சிகிச்சையில் தங்களது பணியில் வாய்ப்புகள் பணி உயர்வு போன்றவற்றுக்கும் சிக்கல் எழுவதாகக் குறிப்பிட்டனர். நிலைமையைச் சக ஊழியர்கள் புரிந்துகொள்வது 15 விழுக்காடாக உள்ளது.
சிங்கப்பூரில் IVF என்று அழைக்கப்படும் செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் காலதாமதமாகத் திருமணம் புரிவது, பிள்ளைகளைத் தாமதமாகப் பெற்றுக்கொள்ள நினைப்பது என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வுத் தகவல்கள் உலக IVF நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குமாரி இந்திராணி ராஜா, கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நிறுவனங்கள் புரிந்துணர்வுடன் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ஓய்வு, நிதி உதவி உள்ளிட்டவற்றைக் கொடுப்பது முதலாளி, ஊழியர்கள் என இருதரப்பினருக்கும் வெற்றிகரமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.