உட்லண்ட்சில் உள்ள ஓர் உணவு நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பு மரணத்தில் முடிந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) இரவு 9.20 மணிக்கு புளோக் 768 உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள உணவங்காடி நிலையத்தில் உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது 73 வயது ஆடவர் சுயநினைவின்றிக் கீழே கிடந்தார். அதன்பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
மரணம் தொடர்பாக 57 வயது ஆடவர் ஞாயிற்றுக்கிழமையே கைது செய்யப்பட்டார். அவர்மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) வேண்டுமென்றே ஒருவரைக் கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்திற்காகக் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
இரண்டு ஆடவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாகவும் அது பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேண்டுமென்றே ஒருவரைக் கடுமையாகக் காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் புரிந்தவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

