ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஓர் இரவு விடுதிக்கு வெளியே வியாழக்கிழமை (ஜூலை 2) அதிகாலை சண்டை நடந்ததாக நம்பப்படுகிறது.
அதில் நால்வர் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை 3 மணியளவில் ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் புயோங் சாலை சந்திப்பிற்கு அருகில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 38 வயதுடைய நான்கு ஆண்கள் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். அவர்களில் மூவருக்குச் சிராய்ப்புகளும், ஒருவருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்தன.
அவர்கள் சுயநினைவோடு இருந்ததாகவும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் விசாரணைகள் மூலம், ஆபத்தான ஆயுதங்களால் வேண்டும் என்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அந்த 27 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறையினர் கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்கிறது.

