பாசிர் ரிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
அவ்வட்டாரத்தின் ஸ்திரீட் 11, புளோக் 127 அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, வெள்ளை நிற வேனின் முன்பகுதி எாிவதைக் காண்பித்தது.
அங்கு நின்றிருந்த ஆடவர் ஒருவர் உடனடியாகத் தீயணைப்புக் கருவி மூலம் தீயை அணைக்க முயற்சித்தும், தீயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து மாலை 5.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. வாகனத்தின் இயந்திரம் உள்ள பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்தவுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் வாகனத் தீ விபத்துகள்
இதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 30 அன்று மாலை 7.40 மணியளவில் சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த எம்பிவி ரக கார் ஒன்றின் இயந்திரப் பகுதியிலும் இதேபோல் தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அதிலும் தீயணைப்பாளர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.

