சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில், வியாழக்கிழமை (மார்ச் 19) அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.
தீச்சம்பவம் தொடர்பாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
“அதிகாலை 3 மணிவாக்கில் சுவா சூ காங் நார்த் 5இல் உள்ள புளோக் 763இல் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்தோம்,” என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
“14வது மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள படுக்கை அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது. இரண்டு நீர் பீச்சிகள் கொண்டு தீ அணைக்கப்பட்டது,” என்று அதிகாரிகள் கூறினர்.
தீயணைப்பு நடவடிக்கையின் போது வீட்டிலிருந்து ஓர் ஆடவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மாண்டதாகச் சம்பவ இடத்திலேயே அறிவிக்கப்பட்டது.
தீச்சம்பவம் ஏற்பட்ட வீட்டிற்கு அதிகாரிகள் செல்வதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்த மற்றொரு நபர் வெளியேறினார். இருப்பினும் அவர் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் புளோக்கில் இருந்து கிட்டத்தட்ட 70 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.

