பொங்கோல் பார்க் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் புகையைச் சுவாசித்ததற்காகச் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அந்த வீட்டில் மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.
ரிவர்வேல் லிங்கில் உள்ள கூட்டுரிமை வீட்டில் சம்பவம் குறித்துப் பிற்பகல் 2.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
சம்பவ இடத்தை அடைந்த அதிகாரிகள் மூன்றாம் தளத்திலிருந்து கரும்புகை வருவதைக் கண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து வீட்டின் படுக்கறையில் மூண்ட தீயை அணைத்தனர்.
அதிகாரிகள் வருமுன் வீட்டிலிருந்து நால்வர் வெளியேறினர். பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
புகையைச் சுவாசித்ததாகக் கூறப்படும் நால்வர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் மூவர் தீ மூண்ட வீட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அண்டை வீட்டார்.
மின்சாரக் கோளாறு காரணமாகப் படுக்கறையில் தீ மூண்டதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

