விட்லி ரோட்டில் உள்ள தரைவீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து ஏழு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். புதன்கிழமை (ஜூன் 24) அதிகாலையில் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோரில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகவும் அது தெரிவித்தது. தாம்சன் மருத்துவ நிலையத்திற்கு அருகில் இருந்த டான் சிம் போ சாலையில் உள்ள வீட்டில் தீ மூண்டது.
நான்கு குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வீட்டின் முதல் இரண்டு தளங்களில் தீ எரிந்துகொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். மூன்றாம் தளமும் தீயில் சேதமடைந்தது. வீடு முழுவதும் புகை சூழ்ந்தது என்றும் ஃபேஸ்புக்கில் அவர்கள் தெரிவித்தனர்.
வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள மாடத்திலிருந்து இருவர் மீட்கப்பட்டனர். மேலும் இருவர் முதல் தளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
புகையைச் சுவாசித்த ஐவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

