உடற்திறன் கண்காணிப்புச் சாதனத் துறையில் முன்னோடியான ஃபிட்பிட் நிறுவனம், சிங்கப்பூரில் ஒரு தனித்துவமான நிறுவனமாகயிருந்த தனது இருப்பை இழக்கவுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கு செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் உள்ளூர் கிளை, தற்போது மூடப்படுகிறது.
ஃபிட்பிட் சிங்கப்பூர் நிறுவனத்தின் வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வர்த்தகத்தின் முடிவு நிலைக்கான இறுதிக் கணக்கைக் கணக்கிடும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது மார்ச் 13ஆம் தேதியன்று உறுதிப்படுத்தப்பட்டது.
மார்ச் 24ஆம் தேதியன்று கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் பிஸ்ஃபைல் இணைய வாசலில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வில், இந்த நிறுவனம் தானாக முன்வந்து மூடுவதற்கான செயல்பாட்டில் இருப்பது உறுதியானது. இந்த நடவடிக்கையானது, பிப்ரவரி 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஃபிட்பிட் சிங்கப்பூரின் 11 ஆண்டு காலப் பயணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைகிறது.
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான கூகல், ஃபிட்பிட் நிறுவனத்தை 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.7 பில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் கையகப்படுத்துவதாக நவம்பர் 2019ஆம் ஆண்டில் அறிவித்து, ஜனவரி 2021ஆம் ஆண்டில் அந்த நடைமுறையை நிறைவு செய்தது. அதன் தொடர்ச்சியாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆப்பிள் மற்றும் சாம்சுங் போன்ற போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அணியக்கூடியக் கருவிகள் தொழில்நுட்பச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தவும் கூகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சாதனங்களை மேலும் அதிகப்படியாக அறிமுகப்படுத்தவும் இந்த கையகப்படுத்துதல் உதவும் என்று கூகல் அப்போது தெரிவித்திருந்தது.
அன்று முதல், ஃபிட்பிட் கூகலுடன் இணைக்கப்படுவது துரிதப்படுத்தப்பட்டது. பிக்சல் கைக்கடிகாரம் வரிசை உள்ளிட்ட கூகலின் சுற்றுச்சூழல் கட்டமைப்புடன் இந்தப் பெயரிலான சாதனங்கள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஃபிட்பிட் பெயரிலான சாதனங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டாலும் ஒரு தனிப்பட்ட வணிகமாக அந்த நிறுவனத்தின் அடையாளம் படிப்படியாகக் குறைந்துவிட்டது.

