காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட், கிளமெண்டி அவென்யூ 4 சந்திப்பில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) காலை நிகழ்ந்த மூன்று வாகன விபத்தில் காயமுற்ற ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் 17 வயதுச் சிறுவன், 16 வயதுச் சிறுமி, 43 வயது ஆடவர், 72 வயது ஆடவர், 71 வயது பெண் ஆகியோர் அந்த ஐவர் எனக் காவல்துறை தெரிவித்தது. அவர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த இரு ஆடவர்களும் கார் ஓட்டுநர்கள். அவர்களில் ஒருவரான அந்த 72 வயது ஆடவர், விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து குறித்து காலை 6.25 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.
சமூக ஊடகத்தில் வலம் வந்த காணொளி, அந்த வாகனங்களில் ஒன்று நடைபாதைமீது ஏறி எம்ஆர்டி ரயில் பாதை தூண்மீது மோதியிருந்ததைக் காட்டியது.
இந்த விபத்தில் வெள்ளை நிற காரும் சாம்பல் நிற காரும் சேதமுற்றன.

