நவம்பர் மாதத்தில் காவல்துறை தீவுமுழுதும் நடத்திய மோசடி எதிர்ப்பு நடவடிக்கையில் பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து காவல்துறையினர் $680,000ஐக் கைப்பற்றினர். ஐந்து சந்தேக நபர்களும் 16க்கும் 43க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.
மேலும் 47 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களில் பதின்மவயதினர் ஒருவரும் 60 வயதுக்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.
சந்தேக நபர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை மோசடிக்காரர்களிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, தங்கள் சிங்பாஸ் அடையாளங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கு மோசடிக்காரர்களுக்கு அவர்கள் அனுமதி கொடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மோசடிகள் மூலம் ஈட்டிய தொகையைப் பெறுவதற்கும் பணமாற்றம் செய்வதற்கும் அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
டிபிஎஸ் வங்கியின் மோசடி எதிர்ப்புக் குழு கொடுத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவு நவம்பர் 1 முதல் நவம்பர் 7 வரை மோசடி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

