மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐவர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐவர் கைது

1 mins read
78a9b1e4-de77-499b-b80a-6b0c7d707cff
மோட்டார் சைக்கிள் உட்லண்ட்ஸ் குளோசில் உள்ள கட்டடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளைத் திருடியதாக நம்பப்படும் ஆடவர்கள் ஐவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கைது செய்யப்பட்டனர்.

உட்லண்ட்ஸ் குளோஸ் பகுதியில் இருக்கும் கட்டடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சனிக்கிழமை (ஜூன் 13) காலை 11.20 மணியளவில் காணாமற்போனதாகத் தகவல் கிடைத்ததெனக் காவல்துறை சனிக்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்தது.

பிறரிடம் விசாரித்தும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகளைக் கொண்டும் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் அந்த ஐந்து ஆடவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கவனிக்கப்படாத அந்த மோட்டார் சைக்கிளை சம்பந்தப்பட்ட ஆடவர்கள் இம்மாதம் 10ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் எப்படியோ மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை (engine) இயக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் அதில் இன்ப உலா சென்றதாகவும் கூறப்படுகிறது.

தகுந்த ஓட்டுநர் உரிமமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக 24 வயது ஆடவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பின்னர் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

சம்பந்தப்பட்ட ஆடவர் ஐவர்மீதும் ஒரே நோக்குடன் வாகனத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்