இளம் பிள்ளைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு வேலையிடங்களில் ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முதலாளிகளுடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகள் மூலம் வேலை-தனிப்பட்ட வாழ்க்கைச் சமநிலையைப் பெற்றோருக்கு உருவாக்கித் தருவதும் இதில் அடங்கும்.
இதன்மூலம் பணியில் கவனம் செலுத்தும் நேரத்தில் பிள்ளைகளையும் அவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
மேலும், முழுநேரமாகப் பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் வேலைக்குத் திரும்ப ஆதரவு வழங்குவதும் இதில் அடங்கும்.
இந்தத் தகவலை கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வேலையையும் குடும்பப் பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகள் வகைசெய்யும் என்று திருவாட்டி கான் கூறினார்.
முதலாளிகள், ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகள் தொடர்பாக இருதரப்பினரும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நிகழ்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடு சுமுகமான முறையில் செயல்பட முதலாளிகள் மற்றும் ஊழியர்களிடையே நம்பிக்கை, தொடர்பு அவசியம். வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளுக்கான ஊழியர்கள் முன்வைக்கும் விண்ணப்பத்தை முதலாளிகள் ஆராய வேண்டும். அதை நன்கு ஆராய்ந்த பிறகு அதுதொடர்பான முடிவு குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பேச வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“வேலை ஏற்பாடுகளில் நீக்குப்போக்கு இருப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை முதலாளிகளால் ஏற்க முடியாத பட்சத்தில் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை ஆராய ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.