சிங்கப்பூர் வரும் புதன்கிழமை தேசிய தினத்தைக் கொண்டாடவிருக்கும் வேளையில், சிங்கப்பூரை மேம்படுத்துவதிலும், அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும், அதன் எதிர்காலத்திற்கு ஒன்றுசேர்ந்து திட்டமிடுவதிலும் நாடு கவனம் செலுத்தவேண்டும்.
அதிபர் ஹலிமா யாக்கோப் ஆற்றிய இறுதி தேசிய தினச் செய்தியில் அவ்வாறு கூறினார்.
அவர் தமது உரையில் பொருளியல் மீள்திறன், நல்லிணக்கம், ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் ஆகியவற்றைக் கோடிகாட்டினார்.
சிங்கப்பூரின் பொருளாதார வெற்றி, காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு உலகிற்கு மதிப்பூட்டும் தனது ஆற்றலைச் சார்ந்துள்ளதாகத் திருவாட்டி ஹலிமா கூறினார். அதனால் தடைகளைக் காட்டிலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமாகத் திகழ்ந்து வருவதாக அவர் சொன்னார்.
“அதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்கள், புவியியல் சார்ந்த போட்டி, அதிகரித்துவரும் தன்னைப்பேணித்தனம், அதிகமான பணவீக்கம், வட்டி விகிதங்கள் ஆகியவற்றினால் எதிர்பாரா சவால்கள் எழும் நிலையில், காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்கும் மதிப்பூட்டுவதற்குமான நமது ஆற்றல் இப்போது மேலும் முக்கியமாக உள்ளது,” என்றார் அவர்.
“நாம் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும். நமது ஆற்றல்களை இழந்துவிடக்கூடாது,” என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
சிங்கப்பூர் திறன்களில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் அதன் ஊழியர்கள் வளர்ச்சித் துறைகளில் உள்ள புதிய, மேம்பட்ட வேலைகளிலிருந்து பயன்பெற முடியும் என்று அவர் சொன்னார்.
திருவாட்டி ஹலிமா அவரது செய்தியில் நல்லிணக்கத்தையும் கோடிகாட்டினார்.
நமது சுதந்திரம் செழிப்பான, பல இன, பல சமய சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டது. நமது பன்முகத்தன்மையை ஒன்றுசேர்ந்து கொண்டாடுவதற்கான முக்கியத் தளத்தை நமக்குக் கொடுக்கிறது, தேசிய தினம்.
சிங்கப்பூர் இதில் முதலீடு செய்யவேண்டும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று திருவாட்டி ஹலிமா கூறினார். உலகம் முழுதும் இனவாதமும் சகிப்புத்தன்மையின்மையும் அதிகரித்துவருவதை அவர் சுட்டினார்.
தொடக்கத்தில் இனவாதக் கலவரங்கள் நிலவிய காலத்திலிருந்து நாம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளோம். இருப்பினும் இணக்கமான, நல்லிணக்கமான சமுதாயத்தின் விழுமியங்களை மறுஉறுதிப்படுத்துவதற்கு, அனைத்துவிதமான தவறான எண்ணங்களையும் கண்ணோட்டங்களையும் நிராகரிக்க, கூட்டாகவும் தனிமனிதனாகவும் நாம் மேலும் அதிகம் செய்யமுடியும் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் இயங்கும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தையும் திருவாட்டி ஹலிமா கோடிகாட்டினார். தங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அனைத்து சிங்கப்பூரர்களையும் ஈடுபடுத்தும் ஒன்றிணைந்த, கூட்டு முயற்சி அது என்றார் அவர். சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடுவதற்கான தளம் அது என்றும் திருவாட்டி ஹலிமா கூறினார்.
58 ஆண்டுகளுக்கும் மேலாக, தடைகளை வெற்றிகண்டு சிங்கப்பூர் தனித்தன்மையான நாடாக விளங்குவதாக அவர் சொன்னார்.
இதுவே தமது இறுதி தேசிய தினச் செய்தி என்று குறிப்பிட்ட திருவாட்டி ஹலிமா, சிங்கப்பூர் அதிபராக ஆறாண்டுகளுக்குச் சேவையாற்றியிருப்பது தமக்குக் கிடைத்த ஒரு பெரிய சிறப்புரிமை என்று தெரிவித்தார். அவரது தவணைக் காலம் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி முடிவடைகிறது.
“மேலும் பரிவுமிக்க, அக்கறையான சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில் ஒன்றிணைந்து, நாம் ஒன்றுசேர்ந்து வழிநடத்திய பல முயற்சிகளுக்கு ஆதரவளித்த சிங்கப்பூரர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். தேசிய தின வாழ்த்துகள்!”, என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.