பொதுமக்கள் தகவல் அளித்ததை அடுத்து, அதிகமானோர் மின்சிகரெட் புகைக்கும் இடங்களாக காத்திப், ஈசூன், பொங்கோல் ஆகிய வட்டாரங்களை சுகாதார அறிவியல் ஆணையம் அடையாளம் கண்டது.
அதனைத் தொடர்ந்து, அவ்வட்டாரங்களில் அக்டோபர் 8லிருந்து அக்டோபர் 10 வரை சுகாதார அறிவியல் ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இணைந்து கூட்டு அமலாக்கப் பணிகளை நடத்தின.
மின்சிகரெட் புகைத்த ஐவர் இந்த அதிரடிச் சோதனையில் பிடிபட்டனர்.
அவர்கள் 15 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மொத்தம் ஆறு மின்சிகரெட்டுகளும் மின்சிகரெட் தொடர்பான சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட் ஒன்றில் ‘எட்டோமிடேட்’ வகை போதைப்பொருள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் கலந்த அந்த மின்சிகரெட் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.
புகைபிடித்ததாக 21 வயதுக்கும் குறைவான ஒருவர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.