பள்ளிகளின் சிற்றுண்டிக் கடைகளை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள ஆள்பற்றாக்குறையை அடுத்து 13 பள்ளிகளுக்கான உணவை மத்திய சமையல் நிலையங்கள் அடுத்த ஆண்டிலிருந்து விநியோகம் செய்ய உள்ளன.
அவற்றுள் ஒன்று சாங் செங் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம். சாங் செங் மீ வா காப்புக் கடைகளை நடத்திவரும் அந்த நிறுவனம் 13 பள்ளிகளின் சிற்றுண்டிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்று.
கோர்மெட்ஸ், வில்மார் ஆகியவை மற்ற இரண்டு உணவு விநியோக நிறுவனங்கள்.
நிறுவனங்களின் உணவுகளின் விலைக்கான வழிகாட்டிகளைக் கல்வியமைச்சு நிர்ணயிக்கிறது. மூன்று விநியோக நிறுவனங்களும் $1.80லிருந்து $4க்கும் குறைவான விலையில் உணவு விற்கவேண்டும்.
சாங் செங், கோர்மெட்ஸ் ஆகியவை மாணவர்களும் பெற்றோரும் ஏற்கெனவே முன்பதிவு செய்த உணவுவகைகளை மட்டும் விநியோகம் செய்யும்.
வில்மார் நிறுவனம் நான்கு பள்ளிகளில் நேரடியாக உணவைச் சமைத்துக்கொடுக்கும் சேவையை வழங்கவிருக்கிறது.
“நேரடியாகச் சமைத்துக் கொடுக்கும்போது மாணவர்களின் தேவைக்கு ஏற்ற உணவு வகைகளைச் செய்துதர முடியும்,” என்று வில்மார் நிறுவனர் குறிப்பிட்டார்.
உணவு விநியோக நிறுவனங்கள் வழங்கும் உணவுகள் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டும். அதிக எண்ணெயில் பொறித்த உணவுகள் தவிர்க்கப்படுவதுடன் முழுதானிய அரிசி, ஆரோக்கிய உணவு வகைகள் பறிமாறப்படுவது அவசியம்.

