செங்காங்கில் வேலை செய்துகொண்டே குழந்தையைக் கவனித்துக்கொண்ட உணவு விநியோகிப்பாளருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
இளஞ்சிவப்பு நிறச் சீருடையில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிக்கொண்டே அந்த உணவு விநியோகிப்பாளர் குழந்தைத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டிருந்த காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
“குழந்தையைக் கவனித்துக்கொண்டே உணவை விநியோகம் செய்யும் ஆடவர். தந்தை மிக ஆற்றல்மிக்கவர்,” என்ற தலைப்பில் காணொளி பதிவிடப்பட்டது.
அந்தத் தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் ஒரு ‘டெலிவரூ’ வெப்பப் பையும் இருந்தது.
கடின உழைப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் அந்த ஆடவரைப் பலரும் பாராட்டினர்.
இருப்பினும், ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது பாதுகாப்பானதா என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், மற்றவர்கள் அத்தகைய கருத்துகளைப் புறக்கணித்து அந்த விநியோகிப்பாளரின் செயலைத் தற்காத்துப் பேசினார்கள்.


