ஜோகூர் பாரு: ஜோகூர் விலங்கியல் தோட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து விலங்குகளைக் காக்கும் வழிகளைப் பராமரிப்பாளர்கள் கையாண்டுவருகின்றனர்.
ஜோகூர் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்கக் குழுத் தலைவர் ஜாஃப்னி ஷுக்கோர் போதுமான அளவில் தூய்மையான தண்ணீர் கிடைப்பதில் விலங்கியல் தோட்டம் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக மலாயன் தப்பிர், புலிகள், நீர் யானைகள், முதலைகள் ஆகியவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதை உறுதிசெய்ய விலங்கியல் தோட்டம் முற்பட்டுள்ளது.
“விலங்குப் பராமரிப்பாளர்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து குளங்களை நிரப்புகின்றனர். வெப்பத்தைச் சமாளிப்பதற்கு வனவிலங்குகளுக்கு உதவுவது அவசியம்,” என்றார் திரு ஜாஃப்னி.
ஜோகூர் விலங்கியல் தோட்டம் புதுமையான விதங்களிலும் விலங்குகளுக்கு உணவளிக்கிறது.
ஊணுண்ணிகளுக்கு ரத்த ஐஸ் கட்டிகளும் பழங்கள் உண்ணும் விலங்குகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைய வைக்கப்பட்ட பழங்களையும் விலங்குக் காப்பாளர்கள் கொடுக்கின்றனர்.
ஜோகூர் விலங்கியல் தோட்டத்தில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து நடைபெற்று வரும் 97 ஆண்டு விலங்கியல் தோட்டத்தின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டதாக திரு ஜாஃப்னி சொன்னார்.
2026ஆம் ஆண்டில் ஜோகூருக்கு வருவோரிடையே விலங்கியல் தோட்டத்தைச் சுற்றுலாத் தலமாக முன்னிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

