சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் விகிதம் 20 விழுக்காடாக இருந்தபோதிலும் அதிகப்படியான சம்பளம் ஈட்டும் சிங்கப்பூர்வாசிகளில் 60 விழுக்காட்டினரை அந்த நிறுவனங்கள் வேலையில் அமர்த்தி உள்ளன.
மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஊழியர் சந்தை நிலவரத்தை விளக்கும் தரவுகள் அதில் இடம்பெற்று உள்ளன.
மாதச் சம்பளம் $12,500க்கு மேல் பெறுவோர் மற்றும் வருவாய் பங்கீட்டில் முதல் பத்து விழுக்காட்டில் இருப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வெளிநாட்டு முதலீடுகள், அந்த முதலீடுகள் தொடர்பான உலகளாவிய திறன்களின் முக்கியத்துவத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாக அமைச்சு தெரிவித்து உள்ளது.
உள்ளூர்வாசிகளின் ஊழியரணி வளர்ச்சிக்கும் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதற்கும் இந்தப் போக்கு உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
ஒருசில வேலைகளில் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கவலை தொடரும் நிலையில் அமைச்சு இப்படி ஒரு புள்ளிவிவரத்தை முதன்முறை வெளியிட்டு உள்ளது.
உள்ளூர் முதலீட்டுப் பங்கில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக வைத்திருந்து குறைந்தபட்சம் ஓர் ஊழியரைக் கொண்டிருக்கும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் குடிமக்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் உள்ளூர்வாசிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் வேலை செய்யும் உள்ளூர்வாசிகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை தருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலை செய்யும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தகத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கித் தருவதாக அறிக்கை குறிப்பிட்டது.