முன்னாள் நடிகரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து; சிங்கப்பூரிலிருந்து நாடுகடத்தப்படுவார்

முன்னாள் நடிகரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து; சிங்கப்பூரிலிருந்து நாடுகடத்தப்படுவார்

2 mins read
பாலியல் குற்றத்துக்காகச் சிறை; மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை
3c8dbc2b-0a24-4c6c-bdff-5c1598ad9a20
2025 ஜூன் 16ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசும் இயன் ஃபாங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலியல் குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனையை நிறைவேற்றிவரும் முன்னாள் நடிகர் இயன் ஃபாங், தண்டனைக்காலம் முடிந்ததும் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்படுவார் என்றும் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் என்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

வயது குறைந்த சிறுமி ஒருவருடன் பாலியல் உறவுகொண்டதன் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளுக்காக 35 வயது ஃபாங்கிற்கு 2025 மே மாதம் 40 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபாங்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவுகொண்டது, தொந்தரவு விளைவித்தது, நீதிச் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன. 2025 ஜூன் 16ஆம் தேதி ஃபாங் சிறைத் தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.

2025 ஜூன் 16ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கும் இயன் ஃபாங்கும் அவரின் தாயார் ஃபாங் பெய் பெய்யும்.
2025 ஜூன் 16ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கும் இயன் ஃபாங்கும் அவரின் தாயார் ஃபாங் பெய் பெய்யும். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் குற்றமிழைக்கும் நிரந்தரவாசிகள்: சட்ட நடவடிக்கை

ஃபாங்கின் வழக்கு குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையச் செய்தித் தொடர்பாளர், குற்றச்செயல்களில் ஈடுபடும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் எவரேனும் தண்டிக்கப்பட்டால், அவர்களின் நிரந்தரவாசத் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஃபாங்கின் நிரந்தரவாசத் தகுதியை வியாழக்கிழமை (பிப்ரவரி 5), ஆணையம் ரத்து செய்தது.

அவர் தண்டனைக் காலத்தை முடித்தவுடன் நாடு கடத்தப்படுவார். மீண்டும் சிங்கப்பூருக்கு வர அவருக்குத் தடை விதிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

ஃபாங்கின் அடையாளத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம்

தொடக்கத்தில் ஃபாங்மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது, அவரது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவு நடப்பில் இருந்தது. இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் விண்ணப்பத்தை ஏற்று, மாவட்ட நீதிபதி எடி தாம் அந்தத் தடையை நீக்கியதை அடுத்து ஃபாங்கின் பெயர் வெளியானது.

2025 ஜூன் 16ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசும் இயன் ஃபாங். அவரின் தாயார் ஃபாங் பெய் பெய் உடன் உள்ளார்.
2025 ஜூன் 16ஆம் தேதி அரசு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசும் இயன் ஃபாங். அவரின் தாயார் ஃபாங் பெய் பெய் உடன் உள்ளார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பதே இந்தத் தடை உத்தரவின் முக்கிய நோக்கம் என்றாலும், குற்றவாளியின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தை மதிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை. குற்றங்கள் புரியப்பட்டபோது அவர் 15 வயது மாணவியாக இருந்தார்.

குறிப்புச் சொற்கள்