ஜூரோங் துறைமுகத்தில் பணியமர்த்தப்பட்ட செர்டிஸ் பாதுகாவல் அதிகாரிகள் இருவர் 4,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் துறைமுகத்தில் பாரந்தூக்கியை நிர்வகிக்கும் ஊழியர் ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளனர்.
முகம்மது கைருல் அமீர் சுகாய்மி, 25, முகம்மது ஆசிபி செலாமத், 32, என்னும் அவ்விரு சிங்கப்பூரர்கள் மீதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) குற்றஞ்சாட்டப்பட்டது.
பாரந்தூக்கியை நிர்வகிக்கும் ஊழியர் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைத் துறைமுகம் வழி கடத்தினார். அவரது குற்றச்செயலைத் தடுக்காமல் இரண்டு அதிகாரிகளும் லஞ்சம் வாங்கினர். இரண்டு அதிகாரிகளும் தற்போது செர்டிஸ் நிறுவனத்தில் இல்லை.
பாரந்தூக்கியை நிர்வகிக்கும் ஊழியர் முகம்மது சுகைமி காஸாலி, 34, என்பவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் சிங்கப்பூர்க் குடிமகன். கஸாலிமீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைருல் 600 வெள்ளியும் ஆசிபி 3,450 வெள்ளியும் லஞ்சமாகப் பெற்றனர்.
ஆசிபி 2021 ஜூன் மாதத்திற்கும் 2022 ஜூன் மாதத்திற்கும் இடையில் சிகரெட்டுகள் கடத்த 35 முறை உதவியுள்ளார். கைருல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம்வரை சிகரெட்டுகள் கடத்த நான்கு முறை உதவியுள்ளார். இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதாகினர். இருவருக்கும் அடுத்த மாதம் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.