தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டைகளைத் திருடி தன் தேவைக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தாதிமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் எனக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மோசடி, திருட்டு, உரிமையாளரின் அனுமதியின்றி அவர்களுடைய கணினி உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் 23 வயதான அந்த ஆண் தாதிமீது சுமத்தப்படும் என அவர்கள் மேலும் கூறினர்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவரான அவர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணிப்புரிந்தார்.
அந்த மருத்துவமனையின் முன்னாள் நோயாளி ஒருவர், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனது வங்கி அட்டை விவரங்களைப் பயன்படுத்திப் பல அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதைக் கண்டறிந்தார்.
அதனையடுத்து ஜூரோங் வட்டாரக் காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்தார்.
மருத்துவமனையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது உடைமைகளை எடுப்பதைத் தான் கண்டதாகவும் மயக்கமாக இருந்ததால் அந்த நபர் என்னென்ன பொருள்கள் எடுத்தார் என்பதைத் தன்னால் கவனிக்க முடியவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பொருள்களை எடுத்தவர் இந்தத் தாதிதான் என்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்ற சில நோயாளிகளின் வங்கி விவரங்களை அந்தத் தாதி திருடியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் 12,000 வெள்ளிக்கு மேல் இழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
மருத்துவமனை ஊழியர்மீது நோயாளிகள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நோயாளிகளின் வங்கி விவரங்களை அவர்களின் கைப்பேசி மூலமாகவும் அவர் பெற்றதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.