முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) இயக்குநர் சபையிலிருந்து ஜூன் 30ஆம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளார்.
தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவராகத் திரு டியோ பதவியேற்கவுள்ள நிலையில் அவர் ஜிஐசியை விட்டு விலகுகிறார்.
திரு டியோ, 2010ஆம் ஆண்டு ஜிஐசி இயக்குநர் சபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2015ஆம் ஆண்டு அவர் அதன் அனைத்துலக ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பதவி வகித்தார்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஜிஐசி நிறுவனத்தின் இயக்குநர் சபை உறுப்பினராக திரு டியோ உள்ளார்.
கடந்த மாதம் பொதுச்சேவையிலிருந்து ஓய்வுபெற்ற திரு டியோ, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தெமாசெக் ஹோல்டிங்ஸில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பார்.
பின்னர் இவ்வாண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைவராக அவர் பதவியேற்பார்.
ஜிஐசியின் தலைவராக உள்ள மூத்த அமைச்சர் லீ சியன் லூங், திரு டியோவின் சேவை குறித்துப் பாராட்டியுள்ளார்.
“உலக அரசியல் நிலவரத்தையும் அதன் ஆபத்தையும் ஆழமாக்க பார்க்கக்கூடியவர் திரு டியோ. கடுமையான உலகச் சூழலில் அவரது அனுபவத்தால் ஜிஐசி சிறப்பான உத்திகளையும் முதலீடுகளையும் செய்தது,” என்று மூத்த அமைச்சர் லீ பாராட்டினார்.