ஏமாற்றுச் செயல்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்கள் மீது ஜூன் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அந்தச் சம்பவங்களில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் $1.6 மில்லியனுக்கும் மேல் இழந்தனர்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியதாக காவல்துறை கூறியது.
அந்தத் தொழில்களின் வங்கிக் கணக்குகளுக்கு, 2018ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2019ஆம் ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு மோசடி ஒன்றால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ளவர்களிடமிருந்து ஏறக்குறைய $1.6 மில்லியன் பணமாற்றம் செய்யப்பட்டதாக வர்த்தக விவகாரப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதே வெளிநாட்டவர்களிடமிருந்து 2019ஆம் ஆண்டு அக்டோபரில் மற்றொரு வர்த்தகத்துக்கு $64,000 அனுப்பப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில், மூன்று ஆடவர்கள் இந்தத் தொழில்களை நிறுவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2018க்கும் 2019க்கும் இடையே, 35 வயது நபர் ஒருவர், அந்த மூன்று ஆடவர்களை ஆலோசனைச் சேவைத் தொழில் ஒன்றில் ஈடுபடுத்தும் நோக்கில், சிங்கப்பூரில் அடையாளம் தெரியாத மற்றொருவரிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்த ஆலோசனைச் சேவைத் தொழிலின் ஒரு பகுதியாக, அந்த மூன்று ஆடவர்களும் தங்களின் சொந்த நிறுவனங்களையும், பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்குகளையும் திறந்ததாக காவல்துறை கூறியது.

