சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக மோசடி வழக்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 15 வயது சிறுவன் உட்பட 231 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதிவரை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.
விசாரணையில் உள்ள நபர்கள் மோசடியில் ஈடுபட்டவர்கள் அல்லது துணை போனவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சோதனைக்கு முன்னர் காவல்துறையினர் ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைய அமலாக்க நடவடிக்கையில் இணையக் குற்றப் பிரிவும் காவல்துறையின் ஏழு பிரிவுகளும் இணைந்து செயல்பட்டன.
விசாரணையில் உள்ளவர்களில் 149 பேர் ஆண்கள், 82 பேர் பெண்கள். அவர்களின் வயது 15க்கும் 76 க்கும் இடைப்பட்டது.
சந்தேக நபர்கள் 721க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் இணைய வர்த்தகம், வேலை வாய்ப்பு, அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம், முதலீடு, அதிர்ஷ்ட குலுக்கல் போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாகக் தெரிகிறது.
இவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $4.1 மில்லியன் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏமாற்றுதல், கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இல்லாமல் கடன் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகவும் சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


