இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் அதிர்ஷ்டக் குலுக்கலில் வென்றதாகப் பொய்யுரைத்து ‘வென்ற’ பணத்தைப் பெற ‘கட்டணங்கள்’ செலுத்தவேண்டும் எனக்கூறி மக்களிடம் பண மோசடிகள் நடந்துள்ளன.
அவ்வாறு $983,000 மதிப்புள்ள தொகை மோசடி செய்யப்பட்டு அதுகுறித்து 254 புகார்கள் பெறப்பட்டன என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அறிக்கை வெளியிட்டது.
பலவிதமான போட்டிகளை மோசடிக் கும்பல்கள் நடத்தியுள்ளனர். அவற்றில் கேள்விகளுக்குப் பதில் அளித்து ரொக்கம் பெறுதல், நிகழ்நேரத்தில் அட்டைகளைக் கிறுக்கி அல்லது ‘லாட்டரி’ எனப்படும் அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலில் பரிசுகள் கிடைப்பது போன்றவை அடங்கும்.
வன்போலி காணொளிகள்
அந்த ஏமாற்று நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு புகழ்பெற்ற மலேசிய சமூக ஊடகவியலாளரின் முகத்தைக் கொண்டு வன்போலி காணொளிகள் தயாரிக்கப்பட்டன.
ஃபேஸ்புக்கின் வழியாகவும் சிறு காணொளிகள் மூலமாகவும் கேள்வி பதில் அங்கத்தில் பங்கெடுக்கும்படி அவர் கேட்டுக்கொள்வது போன்று அவை வடிவமைக்கப்படும். பங்கெடுப்போருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்றோர் அந்தக் காணொளியில் வந்தவரை தொடர்புகொள்ளும்படி அல்லது அவர்களது சொந்தத் தொடர்பு எண்களை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.
அதன்பிறகு அவர்கள் பரிசுகள் வென்றுள்ளதாகவும் அதனைப் பெறுவதற்கு முன் நிர்வாகக் கட்டணங்கள் போன்ற பொய்யான காரணங்களைக் காட்டி பணம் செலுத்தும்படியும் போட்டியாளர்கள் வற்புறுத்தப்படுவர்.
சில சம்பவங்களில் மோசடிக் கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் தாம் மேபேங் வங்கிக் குழுமத்தைச் சேர்ந்தவர் எனவும் போட்டியாளர் செலுத்திய கட்டணம் நிலுவையில் உள்ளதால் அதனைச் சரிசெய்து மீட்டெடுக்க கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனவும் கேட்பார்.
உறுதி செய்யப்பட்ட பரிசுத் தொகை கிடைக்காதபோதும், உறவினர்கள் தெளிவாக நடந்ததை எடுத்துரைத்த பின்புதான் தாம் மோசடிக்கு ஆளானதை பாதிக்கப்பட்ட போட்டியாளர்கள் உணர்ந்துகொள்வர்.

