தன் பிரதிநிதிகள் என்ற பேரில் மின்னஞ்சல்வழி மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து தளவாட நிறுவனமான நிஞ்சா வேன், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிப் பேர்வழிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிஞ்சா வேன் நிறுவனம் அனுப்புவதுபோல் போலி விநியோக அறிவிப்புகளைப் பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி, அவர்களை மோசடி இணையத்தளங்களுக்குச் செல்லத் தூண்டுவதாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“பொதிகளைப் பெறுவோரின் விநியோக முகவரியை நாங்கள் மின்னஞ்சல் அனுப்பிச் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவோ அதனுடன் வரும் இணைப்புகளைச் சொடுக்கவோ வேண்டாம்,” என நிஞ்சா வேன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
“எங்களுடைய குறுஞ்செய்தித் தளமான நிஞ்சாசாட், உறுதிப்படுத்தப்பட்ட எங்களது சமூக ஊடக, வாட்ஸ்அப் கணக்குகள், ninjavan.co என முடிவடையும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற அதிகாரபூர்வ தொடர்பு வழிகளில் மட்டுமே பொதி பெறுநர்களை நாங்கள் தொடர்புகொள்வோம்,” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.