செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக சிங்கப்பூர் 10,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ள நிலையில், அதில் பாதி பேர் புதுத்திறன் திட்டங்களின் மூலம் வந்தவர்களாகவும் மீதிப் பாதி புதிதாகப் பட்டம் பெற்றவர்களாகவும் இருப்பர் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ஏஐ ஊழியரணியை 15,000க்கு மும்மடங்காக்க, அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து நவம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
வேலைக்கு முந்தைய பயிற்சியின் மூலம் தற்போதைய தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பப் பட்டதாரிகளின் ஏஐ தயார்நிலையை உயர்த்துவது ஓர் அணுகுமுறை என்று அவர் குறிப்பிட்டார். இதில் ஏறத்தாழ 5,000 பேர் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.
எஞ்சிய 5,000 பேர், தொடர்கல்வி, பயிற்சித் திட்டத்தில் இணைந்து ஏஐ திறன்களைப் பெற்றிருப்பவர்களாக அல்லது ஏஐ தொடர்பான பொறுப்புகளை ஏற்ற ஊழியர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மற்ற தகவல் தொழில்நுட்ப அல்லது மின்னிலக்கப் பிரிவுகளிலிருந்து பணியிடைக்கால மாற்றம் செய்பவர்களாக இருப்பர்.