எரிபொருள் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, மார்ச் 30ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை தனது டாக்சி பயணங்களுக்கான மீட்டர் கட்டணங்களை உயர்த்துவதாக கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நொவினாவிலிருந்து ஆர்ச்சர்ட் வரையிலான ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் குறுகிய தூரப் பயணத்திற்கு கிட்டத்தட்ட 8 காசுகள் கூடுதலாகச் செலவாகும். அதே சமயம், அங் மோ கியோவிலிருந்து சிட்டி ஹால் வரையிலான ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் பயணத்துக்கு 28 காசுகள் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்திலிருந்து சாங்கி விமான நிலையம் வரையிலான ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் நீண்ட தூரப் பயணங்களுக்கு கிட்டத்தட்ட 80 காசுகள் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மார்ச் 23ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், கிராப் கேப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தெருவில் கைக்காட்டி ஏறும் டாக்சிகள் மற்றும் கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் டாக்சிகள் என அனைத்து மீட்டர் பயணங்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு 45 வினாடி காத்திருப்பு நேரத்துக்கும் 1 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரையிலான ஒவ்வொரு 400 மீட்டர் பயணத்துக்கும் மற்றும் 10 கிலோ மீட்டருக்கும் மேலான ஒவ்வொரு 350 மீட்டர் பயணத்துக்கும் அடிப்படைக் கட்டணம் 26 காசுகளிலிருந்து 27 காசுகளாக உயர்த்தப்படும்.
ஆரம்பக் கட்டணத்தில் மாற்றமில்லை. நான்கு இருக்கை வாகனங்களுக்கு $4.60 மற்றும் ஆறு இருக்கை வாகனங்களுக்கு $4.80 ஆக தொடரும்.
எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை நீடிக்கும் வேளையில், ஓட்டுநர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராப் தெரிவித்துள்ளது. மேலும், ஓட்டுநர்களுக்கு உடனடி உதவியாகக் கடந்த வாரம் எரிபொருள் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் சேர்த்துக் கொண்டது.

