எரிபொருள் விலையேற்றம்: செலவினத்தைச் சமாளிக்கக் கைகொடுக்கும் அரசாங்கம்

எரிபொருள் விலையேற்றம்: செலவினத்தைச் சமாளிக்கக் கைகொடுக்கும் அரசாங்கம்

1 mins read
88df6de0-976a-4118-bd96-1d91bedd43d6
 ஷெல் லேக்வியூ பெட்ரோல் நிலையத்தில் ஊழியர் ஒருவர் காருக்கு எரிபொருள் நிரப்பும் பொதுவான புகைப்படம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டடச் சுற்றுச்சூழல் துறையில் டீசல், பிற்றுமின் ஆகியவற்றின் விலையேற்றம் குத்தகையாளர்கள் சிலர் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முக்கியமான பொதுத்துறைத் திட்டங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆதரவு நல்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹாங் டாட், ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த எரிபொருள்களின் விலையேற்றத்தில் 50 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

“தனியார் துறை மேம்பாட்டாளர்களும் டீசல், பிற்றுமின் எரிபொருள்களின் விலையேற்றத்தைப் பகிர்ந்து, தங்களது குத்தகையாளர்களுக்கு ஆதரவு நல்கும்படி நான் ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பிஇ (BE) எனப்படும் கட்டடச் சுற்றுச்சூழல் நிறுவனங்களுக்கு உதவும் மற்ற திட்டங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் திரு. சீ.

“பொதுத்துறைத் திட்டங்களைப் பொறுத்தவரை, கான்கிரீட், எஃகு வலுவூட்டல்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் ஏற்படும் சுமையைப் பொதுத்துறை மேம்பாட்டாளர்களும் ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தப் பிரிவுகளை (contractual clauses) நாங்கள் கொண்டுள்ளோம்,” என்று திரு. சீ குறிப்பிட்டார்.

“நம்மை நோக்கி நிச்சயமின்மைகள் உள்ளன. போரால் ஏற்பட்டுள்ள தாக்கம் எல்லா நாடுகளையும் பாதிக்கிறது. ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்றைப் போல இதனை எப்படி நாம் கையாள்கிறோம் என்பதில் எல்லாம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, எரிபொருள் விலையேற்றத்தால் கூடுதல் செலவாகும் முக்கியமான அரசாங்க ஒப்பந்தச் செலவுக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பகிரும் என்று நிதியமைச்சு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையின் வழி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்