முப்பது ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு ஜூலை தொடக்கத்தில் கட்டிமுடிக்கப்பட்ட வட்ட ரயில் பாதையின் கடைசி மூன்று நிலையங்களில் பயணிகள் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை தொடங்கியது.
அதிகாலையிலேயே அங்கு மக்கள் கூடிவிட்டனர். பலர் புதிய ரயில் நிலையங்களைப் பார்வையிட்டு அவற்றின் புதிய அம்சங்களை நேரடியாக உணர்ந்துகொள்ளும் அதேவேளையில், அங்கிருந்து பல இடங்களுக்கு ரயில் பயணங்களையும் மேற்கொண்டனர்.
கெப்பல், கென்டோன்மண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரயில் நிலையங்கள் ஜூலை 4ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டன.
அன்றைய தினம் அம்மூன்று நிலையங்களுக்கு இடையே காலை முதல் மாலை வரை இலவச ரயில் சேவைகள் வழங்கப்பட்டன.
கட்டங்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்ட வட்ட ரயில் பாதையின் முதல் பயணம் 2009ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்த மூன்று நிலையங்களில் சேவை தொடங்கிவிட்டதால் பயணிகளின் பயண நேரம் வெகுவாகக் குறையும்.
மூன்று புதிய நிலையங்களிலும் அந்த வட்டாரங்கள் முன்பிருந்த நிலையைப் பிரதிபலிக்கும் பழைய காலத்தை நினைவூட்டும் பல வரைபடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனைப் பொதுமக்கள் பெரிதும் வரவேற்பதாக கருத்துரைத்தனர்.
குறிப்பாக, 20 மீட்டர் ஆளமுள்ள கெப்பல் நிலையத்தில் அரியவகை விலங்குகளின் சிற்பங்கள் அமைந்துள்ளன. நிலத்தடியில் தண்டவாளம் அமைக்க உதவும் சுரங்கத்தைப் பிளக்கும் பெரிய இயந்திரத்தின் மாதிரி வடிவம் ஒன்றும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடலை மையமாகக் கொண்டு பிரின்ஸ் எட்வர்ட் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பயணிகள் மையம், ஒரு மரக்கப்பலின் கீழ்பாகத்தைப்போல் அமைந்துள்ளது. அதன் சுவர்கள், கடல் அலைகள் பாய்வதைப்போன்று உள்ளன.

