முழு நேரக் காவல்துறை தேசிய சேவையாளரான 23 வயது ஆடவர், புதன்கிழமை (செப்டம்பர் 15) சேவை கைத்துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டார்.
கழுத்தில் குண்டடிபட்டு தனிமையில் இருந்த அவரை உடன் பணியாற்றிய குழுவினர் இரவு 9 மணியளவில், 328 பாசிர் பாஞ்சாங் ரோட்டில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தின் ஒரு கழிவறையில் கண்டுள்ளனர். இதனைக் காவல்துறை செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
அதிகாரபூர்வ பணியில் இருந்த அவர் சுய நினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது சேவை கைத்துப்பாக்கியும் மீதம் இருந்த தோட்டாக்களும் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டன. வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முதற்கட்ட விசாரணையில் அந்தக் காயம் அவரே ஏற்படுத்திக்கொண்டது என்று தெரியவந்துள்ளது. வேறு குற்றச் செயல்கள் நடந்ததாகச் சந்தேகம் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியது.
விசாரணை தொடர்கிறது.