இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) பெற்றுக்கொண்டனர்.
தேர்வு எழுதிய 9,369 வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவு (NA) மாணவர்களில் 99.5 விழுக்காட்டினரும் 4,421 வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவு (NT) மாணவர்களில் 98.3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவிலிருந்து 48 விழுக்காட்டு மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களுக்கு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு எழுதினர். வழக்கநிலை மற்றும் சாதாரண நிலை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வழக்கநிலை ஏட்டுக்கல்வி பிரிவு அல்லது உயர்கல்வி வாய்ப்புகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
இதில் வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவிலிருந்து 76.7 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலை ஐந்திற்குச் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் ஜூரோங் உயர்நிலைப்பள்ளி மாணவி கினிஷா நீலமேகமும் ஒருவர்.
விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் 2022ஆம் ஆண்டு வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவிலிருந்து வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவுக்கு மாறினார் கினிஷா.
தம் வகுப்பில் சக மாணவர்கள் இடையே சிறந்த மனநலன் இருப்பது முக்கியம் என்று கருதும் இவர், ஆரோக்கியமிக்க மனநலன் சார்ந்த சூழலை ஆதரிப்பவராகவும் திகழ்கிறார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டத்தின் மூலம் கணக்கியல் அல்லது வணிகம் சார்ந்த உயர்கல்வி பயில விரும்புகிறார் கினிஷா.
தொடர்புடைய செய்திகள்
தாம் மேற்கொள்ளவிருக்கும் கல்வி, எதிர்காலத்தில் சில்லறை வர்த்தகத்தில் மிகப் பயனுள்ளதாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்ச்சி பெற்ற கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர் சண்முக ரோகன் ரவிந்திரன் ஜோசஃப், பள்ளியின் வெளியே மின்னிலக்க தடயவியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
தனது பள்ளியில் தேசிய மாணவர் காவல் படையின் ஒரு முக்கிய உறுப்பினராகத் திகழும் ரோகன், வருங்காலத்தில் சிங்கப்பூர் காவல்படையில் புலனாய்வு அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறார்.
காவல்துறை மீதான அலாதி ஆர்வத்தால் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சட்டம் மற்றும் மேலாண்மை உயர்கல்வி பயில விரும்புகிறார் ரோகன்.