பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கு மக்கள் செயல் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தலைமை ஏற்பார். அந்தக் குழுத்தொகுதியில் அக்கட்சி சார்பாக இரு புதுமுகங்களும் களமிறங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் திரு சீ தவிர திரு சக்தியான்டி சுபாட்டும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டனர்.
இவ்விருவர் தவிர, அந்தக் குழுவில் புதுமுகங்களான எலிசா சென், சாய் யின்சாவ் ஆகியோரும் இடம்பெறுவர் என்று வெள்ளிக்கிழமை மக்கள் செயல் கட்சியின் தோ பாயோ வெஸ்ட் - தாம்சன் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியானது சிங்கப்பூர் மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும். இம்முறை அரசியலிலிருந்து ஓய்வுபெறும் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் மசெக அணியில் இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஐந்து தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது 24 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றிக் கருத்துரைத்த அவர், “மக்கள் செயல் கட்சியின் மிக முக்கிய பலமே அது மேற்கொண்டுவரும் தலைமைத்துவ புதுப்பிப்புதான். என்னைப்போல், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இன்னும் பல ஆண்டுகள் சேவை செய்ய முடியும் என்றபோதிலும் புதியவர்களுக்கு வழிவிட்டிருக்கின்றனர். அதை நானும் பின்பற்ற காலம் கனிந்துவிட்டது,” என்றார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி, மனிதவள துணை அமைச்சர் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் மேரிமவுண்ட் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.