சிங்கப்பூரில் வழக்கு தொடுப்பவர்கள் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக்கூடும்.
அதன் மூலம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அல்லது எதிர்வாதங்களின் தொடர்பில் அவர்களுக்கு உதவி வழங்க ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும்.
முதலில் சிறுகோரிக்கை நடுவர் மன்றத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு சோதிக்கப்படும்.
அதில் ஓராண்டுக்கு ஏறக்குறைய 10,000 வழக்குகள் கையாளப்படுகின்றன.
தங்களைத் தாங்களே பிரதிநிதிப்பவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிறுகோரிக்கை நடுவர் மன்றத்தில் வழக்கறிஞர்கள் இல்லாததால், செயற்கை நுண்ணறிவுக்கான சோதனையை நடத்த அதுவே சரியான இடம் என்று நீதிபதி அய்டிட் அப்துல்லா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
அந்தத் தொழில்நுட்பத்தை ஈராண்டுகளுக்குப் பயன்படுத்த சிங்கப்பூர் நீதிமன்றங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நிறுவனமான ‘ஹார்வி ஏஐ’யுடன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.
அதனைத் தொடர்ந்து, உருமாற்றம், புத்தாக்கம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் நீதிபதி அப்துல்லா அண்மைத் தகவலை வெளியிட்டார்.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இவ்வாண்டு நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ‘ஹார்வி ஏஐ’யின் நிறுவனரையும் தலைமை நிர்வாக அதிகாரியையும் சந்தித்தார். அதன்பிறகு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான உடன்படிக்கை குறித்த பேச்சு எழுந்தது.
முதற்கட்ட ஆய்வு, ஆவணங்களைச் சுருக்குவது போன்றவற்றுக்குச் சட்ட நிபுணர்களுக்கு உதவ, உலகில் உள்ள சில சட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.