அப்பர் சாங்கி சாலை ஈஸ்டில் கெட்கோ (GetGo) வாடகைக் காரில் வியாழக்கிழமை (மே 29) காலை திடீரென தீப்பற்றிக்கொண்டது.
பற்றியெரிந்த கார் குறித்து காலை 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான காணொளியில் கெட்கோ கார் பகிர்வு சேவையின் கார் நெருப்பில் எரிந்துகொண்டிருந்ததைக் காண முடிகிறது.
காரின் பின்பகுதி திறந்திருந்ததுடன் காரின் ஒரு பகுதி தீயில் கருகிய நிலையில் தரையில் காணப்பட்டது.
காரைப் பழுதுபார்க்கும் பட்டறையைச் சேர்ந்த ஒருவர் அனுமதியின்றி தீப்பிடித்த காரை ஓட்டிச்சென்றதாக கெட்கோ நிறுவனம் சொன்னது.
நிறுவனமும் சம்பவம் குறித்து விசாரித்துவருகிறது.
தனது நிறுவனத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் தரநிலைக்கு ஏற்றவாறு இருக்கின்றன என்றும் அவை ஓட்டுவதற்குப் பாதுகாப்பானவை என்றும் கெட்கோ தெரிவித்துள்ளது.

