கடந்த மே மாதம் தமது அரசியல் பதவியிலிருந்து விலகிய முன்னாள் மூத்த துணையமைச்சர் கோ போ கூன், செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களுக்கான இடத்தில் அமர்ந்தார்.
நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான அமர்வுத் திட்டத்தின்படி, அவர் பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் ஆகியோருக்கு இடையே அமர்த்தப்பட்டுள்ளார்.
முன்னதாக மனிதவள, சுகாதார மூத்த துணையமைச்சராகப் பொறுப்பு வகித்த டாக்டர் கோ, குடும்பக் காரணங்களுக்காக அரசியல் பதவியிலிருந்து விலகினார். ஜூன் 1ஆம் தேதி வரை துணையமைச்சராகப் பதவி வகித்தார்.
2015ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த பிறகு, தமது குடும்பத்தினருக்குப் போதிய நேரம் ஒதுக்க இயலவில்லை என்றும் இனி மருத்துவப் பணிக்குத் திரும்பவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தகுதி, பொறுப்புகளின் அடிப்படையில் அமர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் தற்போதைய இருக்கை அமைப்புகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

