கடந்த 2025ஆம் ஆண்டு தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதனால், தங்க நகைகளின்மீது சிங்கப்பூர் வாடிக்கையாளர்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது.
அண்மைய காலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்க நகை விற்பனை மந்தமாக இருந்த ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த ஆண்டு இருந்தது என்றால் அது மிகையாகாது.
இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் பொருட்டு நகைகளின் வடிவமைப்புகளைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் தங்க நகை விற்பனையாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலக தங்க மன்றத்தின் தரவுகளின்படி, சிங்கப்பூரில் தங்க நகை விற்பனை கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் எட்டு விழுக்காடு குறைந்துள்ளது.
இருப்பினும், அந்தச் சரிவு தங்க முதலீட்டுத் தேவையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் ஈடுசெய்யப்பட்டது.
மேலும், அதே காலகட்டத்தில் தங்கக் கட்டிகள், நாணயங்களின் விற்பனை 47 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்தது. வலுவான முதலீட்டு தேவை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என ஆய்வாளர்கள் முன்னுரைக்கின்றனர்.

