வானில் ஆக நீளமான வண்ண வாணவேடிக்கை 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் மிளிர, மக்கள் திரளாக நின்று 2024 க்கு நன்றி கூறி புதிய ஆண்டை குதூகலத்துடன் வரவேற்றனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக மீடியாகார்ப் ஆண்டுதோறும் அதன் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறை சற்று மாறுபட்டு, வழக்கமாக நடைபெறும் மரினா பே வளாகத்திற்குப் பதிலாக சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் நிகழ்ச்சிகள் களைகட்டின.
மாலை 5 மணியளவில் தொடங்கிய கொண்டாட்டத்தில் குடும்பங்களை மகிழ்விக்கும் நடவடிக்கைகள் பல இடம்பெற்றன. அதைத்தொடர்ந்து ‘லெட்ஸ் செலபிரேட் 2025’ புத்தாண்டு கலை நிகழ்ச்சியில் மீடியாகார்ப் கலைஞர்கள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மீடியாகார்ப் கலைஞர்களான ஹோக்கிம் கோமஸ், முனா பக்ஹரிப் நிகழ்ச்சி நெறியாளர்களாக மக்களை குதூகலப்படுத்தி புத்தாண்டு உணர்வை மெருகூட்டினர்.
வசந்தம் தொலைக்காட்சி கலைஞர்கள் கௌஷிக் ஐயர், பாஹா, பவித்ரா நாயர், விஷ்ணு பாலாஜி ஆகியோர் தமிழில் பாடல்கள் பாடி நாம் கேட்டிருந்தாலும், இம்முறை புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர்கள் ஆங்கில பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர்.
“தமிழில் அதிகம் பாடல்கள் பாடி பழக்கம் இருப்பதால் ஆங்கிலத்தில் பாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவியுடன் புதிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார் விஷ்ணு பாலாஜி.
“புதிய ஆண்டில் நான் புதியனவற்றை எதிர்நோக்க காத்திருக்கிறேன். ஊடகத்தில் ஒரு கலைஞனாக இருப்பதற்கு அப்பாற்பட்டு வீட்டிலும் ஒரு சிறந்த மகனாக இருக்க விரும்புகிறேன். மக்கள் வேறொரு ரூபம் கொண்ட பாஹாவை 2025ல் காணலாம்,” என்று பாஹா சொன்னார்.

