சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு அதிபர் அலுவலகம், தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை உள்ளிட்ட வெவ்வேறு அரசாங்க அமைப்புகள் அவற்றின் தேசிய தின பற்றுறுதி நிகழ்ச்சிகளை அனுசரித்துள்ளன.
இஸ்தானாவில் நடைபெற்ற தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்துகொண்டனர்.
அவர்கள் தேசிய கீதத்தைப் பாடி உறுதிமொழியைக் கூறினர்.
தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் படைத்த டிகிர் பாராட் என்ற மலாய் பாடல் குழுவின் நிகழ்ச்சியையும் அவர்கள் கண்டு களித்தனர்.
புக்கிட் கொம்பாக்கில் உள்ள தற்காப்பு அமைச்சின் தலைமையகத்தில் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் உறுதிமொழியைக் கூறி தேசிய கீதத்தைப் பாடினார்.
தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகியவற்றை சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேர் திரு சானுடன் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் இணைந்தனர்.
சிங்கப்பூர் தனி நாடானது முதல் இன்று வரை சிங்கப்பூர் ஆயுதப் படை வகித்த பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ‘த சிங்கப்பூர் ஷோ’ என்ற கருப்பொருள் கொண்ட நிகழ்ச்சியைச் சிங்கப்பூர் ஆயுதப் படையின் இசை, நாடகக் குழு முன்வைத்தது.
சிங்கப்பூர், தேசிய சேவையின் 60ஆம் ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கிறது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் அதன் 61வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.


