கிராப் நிறுவனம், சிங்கப்பூரின் 3வது ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான டிரான்ஸ்-கேப்பைக் கையகப்படுத்தவுள்ளது.
ஆனால் என்ன விலைக்கு வாங்குகிறது என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும், நூறு மில்லியன் வெள்ளிக்கு மேல் டிரான்ஸ்-கேப்பை கிராப் கையகப்படுத்துவதாக நம்பப்படுகிறது. டிரான்ஸ்-கேப்பின் 2,200 டாக்சிகள், 300க்கும் மேற்பட்ட தனியார் வாடகை வாகனங்கள் ஆகியவற்றையும் கிராப் கையகப்படுத்தவிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது என்றும் ஒப்பந்தம் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் டிரான்ஸ்-கேப் நிறுவனரும் தலைவருமான டியோ கியாங் ஆங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“இது 20 ஆண்டுகால பயணமாக இருந்துவந்தது. முதல் நாளிலிருந்து என்னோடு பயணித்த ஓட்டுநர்கள் பலர். நிறுவனத்தை விற்க எனக்கு மனமில்லை என்றாலும் வாங்கும் நிறுவனத்திடம் நல்ல தொழில்நுட்பமும் வலுவான தளமும் இருப்பதால் ஓட்டுநர்களுக்கு மேலும் அதிக வேலைகளும் கூடுதல் வருமானமும் கிடைக்கும்,” என்றார் திரு டியோ.
விதிமுறை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டால் நான்காம் காலாண்டில் இந்த ஒப்பந்தம் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக இரு நிறுவனங்களும் தங்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டன.
இந்த விற்பனை நிறைவேறினால் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட கிராப் நிறுவனம், கையகப்படுத்தும் முதல் சிங்கப்பூர் டாக்சி நிறுவனமாக டிரான்ஸ்-கேப் விளங்கும்.
கிராப், பல ஆண்டுகளாக டாக்சி நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
2017ஆம் ஆண்டில் எஸ்எம்ஆர்டி டாக்சி நிறுவனத்தை வாங்க கிராப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. 2022ல் சிங்கப்பூரின் சிறிய டாக்சி நிறுவனமான பிரைம் டாக்சியுடனும் கிராப் பேச்சைத் தொடங்கியது. அதுவும் சாத்தியமாகவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாங்குவதற்கான தொகை மிகச் சிறியதாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘ஸ்ட்ரைட்ஸ்’ என்று பெயர் மாற்றம் கண்ட எஸ்எம்ஆர்டி டாக்சி, 2,500 வாகனங்களுடன் பிரிமியர் டாக்சி நிறுவனத்தை வாங்கியது.
ஆனால் கம்ஃபர்ட்டெல்குரோ இன்னமும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய டாக்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது, 8,800 டாக்சிகளை வைத்துள்ளது. அதாவது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த டாக்சி சந்தையில் அதன் பங்கு 60 விழுக்காடாகும்.
இதற்கிடையே, டிரான்ஸ்-கேப் டாக்சிகளின் திரைகளுடன் ஒருங்கிணைந்த ஒரு செயலியை கிராப் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டாக்சி ஓட்டுநர்களுக்கு கிராப் தளத்தின் வழியாகவும் தற்போது இயங்கிவரும் டிரான்ஸ்-கேப்பின் தொடர்பு நிலையத்தின் வழியாகவும் பயண அழைப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.