பட்டம் பெறாதோரைவிட பட்டதாரிகளுக்கே அதிக திறன் வாய்ந்த வேலை வாய்ப்புகளும் அதிக சம்பளமும் கிடைப்பதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வேலையிடங்களில் புத்தாக்கமான மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறியபோதும் அத்தகைய நிலை நீடிப்பதாக ஆய்வு சுட்டியது.
வேலை தொடர்பான பயிற்சிகள், வேலையிடக் கற்றல் ஆகியவற்றுக்கான கூடுதல் வாய்ப்புகளைக் கிட்டத்தட்ட 56 விழுக்காட்டு ஊழியர்கள் பெறுவதாக வேலை வாய்ப்பு- திறன் ஆய்வு தெரிவித்தது.
ஆனால் பட்டதாரிகள் கூடுதல் அனுகூலங்களுடன் திறன்களையும் சம்பளத்தையும் பெறுவதாக ஆய்வு காட்டுகிறது. அத்தகையோர் எழுத்தறிவிலும் எண்ணியல் திறன்களிலும் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை.
மறுபக்கம் திறன்மிக்க பட்டதாரி அல்லாதோர் குறைவான மேம்பாடுகளை எதிர்கொண்டனர். அத்தகையோர் எழுத்தறிவிலும் எண்ணியலிலும் அதிக நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அந்த நிலை நீடிப்பதாகத் தெரிவித்தனர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் ஸ்கிஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் ஊழியரணியும் இணைந்து ஆய்வை வெளியிட்டன.
மிதமான அல்லது குறைவான திறன்கொண்ட பட்டதாரிகளுக்குத் திறன்மிக்க கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிகிறது. அத்தகையோருக்கான வேலை வாய்ப்புகள் பத்தாண்டுக்கு முன் 61 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 74 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
திறன்மிக்க பட்டதாரிகளுக்கான 78 விழுக்காட்டு வேலை வாய்ப்புக்கு நிகராக அது அதிகரித்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மாறாக, அதிகத் திறன் இருந்தாலும் பட்டதாரிகள் அல்லாதோருக்கான வேலை வாய்ப்புகள் 59 விழுக்காட்டிலிருந்து 39 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளன.
மிதமான, குறைவான திறன்கள் கொண்ட பட்டதாரிகளுக்குக் கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது.
மாறாக, திறன்மிக்க பட்டதாரி அல்லாதோரின் சம்பளம் அவ்வளவிற்கு உயரவில்லை.