எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று (ஜூன் 8) அறிவித்தார்.
இதனை முன்னிட்டு அவர் மக்கள் செயல் கட்சியிலிருந்து ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக இருக்கிறார்.
திரு தர்மன் பல ஆண்டுகளாக ஜூரோங் குழுத் தொகுதிக்குத் தலைமைத் தாங்கினார். அவரது நேரடி மேற்பார்வையின்கீழ் இருந்த தாமான் ஜூரோங் தொகுதியை மிகவும் சிறப்பாகப் பார்த்துக்கொண்டார்.
திரு தர்மன் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று தெரியவந்ததும் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழக்கப்போகிறோம் என்ற ஏக்கம் ஜூரோங் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு இருப்பது இதற்குச் சான்று.
தாமான் ஜூரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு தர்மனின் தன்னிகரற்ற செயல்பாட்டை மெச்சினார் தாமான் ஜூரோங் கடைத்தொகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மளிகைக்கடை வைத்திருக்கும் திரு சுந்தரராஜன் பழனி.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு திரு தர்மன் அந்த கடைத்தொகுதிக்குச் சென்றிருந்தபோது அவரை முதல்முறையாகச் சந்தித்தார் திரு சுந்தரராஜன், 48.
கடைத்தொகுதியில் உள்ள பொதுக் கழிவறைகள் மிக மோசமான, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை திரு சுந்தரராஜனும் மற்ற கடைக்காரர்களும் திரு தர்மனிடம் முறையிட்டனர்.
அடுத்த ஒரு மாதத்துக்குள் கழிவறைகளைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியதாக திரு சுந்தரராஜன் நினைவுகூர்ந்தார்.
திரு தர்மன் கனிவானவர் என்றும் உடனடி நடவடிக்கை எடுப்பவர் என்றும் அவர் கூறினார்.
“திரு தர்மன் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது. ஆனால் தாமான் ஜூரோங் தொகுதிக்கு அது இழப்பாகும்,” என்றார் திரு சுந்தரராஜன்.
திரு சுந்தரராஜனைப் போல ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய கிட்டத்தட்ட 50 குடியிருப்பாளர்கள் திரு தர்மனை மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என வர்ணித்தனர்.
கேட்காமலேயே தங்களுக்கு திரு தர்மன் உதவி செய்ததாக ஏறத்தாழ 40,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.
“ஜூரோங் குழுத் தொகுதியைச் சேர்ந்த இளையர்களுக்குத் திரு தர்மன் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்து வந்தார்.
குடியிருப்பாளர்களுடன் அவர் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அவர் நாட்டின் அதிபரானதும் துடிப்புமிக்க குடிமக்களாக இருக்க இளையர்களைத் தொடர்ந்து ஊக்கவிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று 25 ஆண்டுகளாக புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் 71 வயது திருவாட்டி தனலட்சுமி கூறினார்.