சிங்கப்பூர் பூமலையில் கடந்த 25ஆண்டுகளாக பலரையும் வரவேற்று வந்த ‘தி ஹாலியா’ உணவகம், இவ்வாண்டு மார்ச் மாதம் மத்தியில் அதன் கதவுகளை நிரந்தரமாக மூடவுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 8) அதன் இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்திருந்தது. “நீங்கள் வழங்கிய இனிய நினைவுகளுக்கும் இந்த இன்பமான இடத்தில் நடந்த கொண்டாட்டங்களுக்கும் நன்றி,” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிய உணவு வகைகளைக் கலவையாக வழங்கிய அந்த உணவகம் 2001ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. பூமலையின் இயற்கை எழில் சிந்தும் அதன் சுற்றுச்சூழல் சிறந்த உணவருந்தும் அனுபவத்தை வருகையாளர்களுக்கு வழங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘தி ஹாலியா’ அதன் ஆண்டு நிறைவையும் கொண்டாடியது.
அண்மையில் சில உணவகங்கள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்தச் செய்தியும் இப்போது பகிரப்படுகிறது.
டெம்ஸி ரோட்டில் இருக்கும் ‘ஓபன் ஃபார்ம் கம்யூனிட்டி’ எனும் திறந்தவெளி பண்ணை உணவகம், தியோங் பாருவில் ‘பேக்கரி சஃபாரி’ உணவகம் ஆகிய இரண்டும் ஜனவரி 11ஆம் தேதி மூடப்படுகின்றன.

