கலாசார, சமுதாய, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், இதய ரத்தக் குழாயில் இருந்த அடைப்பை நீக்கும் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் அவர் அதனைப் பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி தமது 54வது பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடியது குறித்துத் தாம் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“வாழ்க்கையில் நான் அடைந்த பல நல்லனவற்றிற்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக எனது 54வது பிறந்தநாள் அமைந்திருக்கிறது,” என்றார் அவர்.
தாம் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இரண்டாம் சட்ட அமைச்சரும் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு எட்வின் டோங், வழக்கமான சுகாதாரப் பரிசோதனையின்போது தமது இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்ததாகக் கூறினார். ஆகஸ்ட் 8ஆம் தேதி தமக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.