சில நாள்களாகவே மாலை நேரங்களில் புகை நெடியைத் தீவின் பல இடங்களில் மக்கள் உணர்ந்துள்ளனர். அது புகைமூட்டத்தால் ஏற்பட்டது என்பதே உண்மை.
மத்திய சுமத்ராவிலும் ஜோகூரின் பல இடங்களிலும் புகையுடன் தீ எரிந்துவருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. சிங்கப்பூர் உட்பட்ட அதனைச் சூழ்ந்த வட்டாரத்தில் நிலவும் வறண்ட வானிலையும் வடகிழக்கு திசையிலிருந்து வீசும் பருவக்காற்றும் இணைந்து, புகைமூட்டத்தின் அபாயத்தை அதிகரித்துள்ளதை வாரியம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வழக்க நிலையில் இருந்துள்ளது. அதேநாள் இரவு 7 மணி அளவில் 24 மணிநேர மாசுக் குறியீடு, 45 முதல் 57 வரை இருந்து ‘நல்ல’ அளவுக்கும் ‘மிதமான’ அளவுக்கும் இடையே இருப்பதைக் காட்டியது.
சிங்கப்பூரில் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், வரும் நாள்களில் அன்றாட வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் அளவை எட்டும் என்று வாரியம் கணித்துள்ளது.
வெளிப்புற நடவடிக்கைகளில் நீண்டநேரம் ஈடுபடுவோர் வெப்பம் தாக்காமல் இருக்க உரிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெப்பம் சார்ந்த நோய்கள், பிரச்சினைகள் குறித்து மேல்விவரங்களை அறிய https://www.weather.gov.sg/heat-stress/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம், அல்லது myENV App என்ற செயலியைப் பயன்படுத்தலாம்.

