வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 2024ஆம் ஆண்டு கடுமையான 859 நீர்க்கசிவு சம்பவங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதாகத் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.
பொதுவாக நீர்க்கசிவால் ஏற்படும் பிரச்சினைகள் வீவக வீடுகளின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வீடுகளின் மேல் சுவர்களில் கடுமையாக இருக்கும்.
பருவமழைக் காலமான மார்ச் மாதத்தில் வீவக வீடுகளில் அதிகமான நீர்க்கசிவுப் பிரச்சினைகள் இல்லை என்று திருவாட்டி சிம் ஆன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும் சில நகர மன்றங்களிடமிருந்து வீவகவிற்கு கருத்துகள் வருகின்றன. அதில் பருவ மழைக் காலங்களில் நீர்க்கசிவுப் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாக அவை கருதுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு எத்தனை நீர்க்கசிவு பிரச்சினைகள் ஏற்பட்டன, அவற்றில் எத்தனை தீர்த்து வைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரி டான் (நீ சூன் குழுத்தொகுதி), லியாங் எங் ஹுவா (புக்கிட் பாஞ்சாங்) ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்தபோது இந்தத் தகவல்களைத் திருவாட்டி சிம் ஆன் வெளியிட்டார்.
மேலும் வீவக பேட்டைகளில் உள்ள பொது இடங்களைப் பராமரிப்பு செய்ய வேண்டும், வெளிப்புறச் சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டாலும் குடியிருப்பாளர்கள் நகரமன்றங்களை நாட வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இவை தவிர, நகரமன்றங்களுக்குத் தேவையான உதவிகளையும் வீவக தொடர்ந்து வழங்கும் என்றும் திருவாட்டி சிம் ஆன் உறுதியளித்தார்.

